பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவி தொடர்பில் அவதானம்

பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவியொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் இன்னும் கலந்துரையாடலில் உள்ளதாகவும், அமைச்சரவைக்கு அறிவித்த பின்னர் எதிர்காலத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவி என்பது ஜனாதிபதியால் நிறுவப்படும் ஒரு சிவில் பதவியாகும்.

ஆனால், ஆணையாளர் பதவிக்கு நியமிக்கப்படும் நபருக்கு, பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகத்தை கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படவுள்ளது.

அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, ​​பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இந்த பதவி 03 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நியமனம் நிரந்தர நியமனமாக அமுல்படுத்தப்படும் என இதுவரை எந்த தரப்பம் அறிவிக்கவில்லை.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன பெயர், தற்போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள போதிலும்  புதிதாக நிறுவப்படவுள்ள பொலிஸ் ஆணையாளர் நாயகம் பதவி முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கே கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.