நாடு கடத்தப்படும் பணிப்பெண்கள்!

இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று (04) காலை குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இக்குழுவினர் நேற்று (04) காலை 06.35 மணியளவில் குவைத் விமான நிலையத்தில் இருந்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இவர்கள் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வர முடியாமல் அங்குள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்துள்ள இலங்கையர்களே இவ்வாறு இன்று நாடு கடத்தப்பட்டனர்.

ஒரு ஆண் வீட்டுப் பணியாளரும், 34 வீட்டுப் பெண் பணியாளர்களும் இக்குழுவில் அடங்குகின்றனர்.

குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம், உள்விவகார அமைச்சு, குடிவரவுத் திணைக்களம், நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இந்த வீட்டுப் பணியாளர்களை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி, வீட்டுப் பணியாளர்களுக்கு எதிரான வழக்குகள் தீர்க்கப்பட்டு, தற்காலிக கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டு, விமான பயணச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு சம்பளம் மற்றும் பிற சலுகைகளை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பை இலங்கை தூதரகம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.