வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடு!

பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டத்துடன் காணி வழங்க ஆராயவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது, மக்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று (12) காலை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் கண்டாவளை மகாவித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியுள்ள மக்களை சந்தித்தார்.

இதன்போது கண்டாவளை பிரதேச செயலாளர் T. பிருந்தாகரன், கிராம சேவையாளர் உள்ளிட்ட பலரும் அங்கு சென்றிருந்தனர்.

இதன்போது மக்களின் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியில் உள்ள மக்களின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய வீட்டுத்திட்டத்துடன் பாதுகாப்பான இடத்தில் காணி வழங்க மக்களின் விருப்பத்தை கேட்டறிந்தார்.

மேலும், குளத்தின் நீர்மட்டத்தை மேலும் குறைத்து அனர்த்த பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளமையால், தொடர்ந்தும் சில நாட்கள் வெள்ள நிலைமைகளை அவதானித்து வீடுகளுக்கு செல்லுமாறும் அவர் மக்களிடம் தெரிவித்தார். 

அனர்த்த பாதுகாப்புக்காக தஞ்சம் அடைந்த மக்களிற்கு சமைத்த உணவு பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் வழங்கப்பட்டு வருவதுடன், சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களும் முறையாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.