நபர் ஒருவரை கடத்தி தாக்குதல் நடாத்திய மூவர் கைது !

புத்தளம், வனாத்தவில்லு – எழுவன்குளம் பகுதியில் நபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்த கும்பலொன்றின் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக வனாத்தவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.

வேன் ஒன்றில் பயணித்த குழுவினர் பொலிஸார் என நடித்து குறித்த நபரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எலுவன்குளம், ரால்மடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேனும் இதுவரை கைப்பற்றப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.