மின் தடைக்கான தவறை ஏற்றுக் கொண்டது மின்சார சபை!

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையினால் ஏற்பட்ட தவறு என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய 5 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில் அதனை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதுபோன்ற திடீர் மின்தடை ஏற்படும் பட்சத்தில், கூடுதல் மின் உற்பத்தியை பராமரிக்க வேண்டும் என்றாலும்,​ கூடுதல் மின் உற்பத்தியை பராமரிக்க முடியாது போனதாக சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கூடுதல் மின் உற்பத்தியை பராமரிப்பதற்கான செலவைக் கண்டறிய, அதன் சுமைகளை மக்கள் சுமக்க வேண்டி ஏற்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடி இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 9ம் திகதி நாடு முழுவதும் திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டது.

கொத்மலையில் இருந்து பியகம வரையிலான மார்க்கத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த மின்சாரத் தடை ஏற்பட்டது.

எவ்வாறாயினும் மின்சார சபை பகுதி, பகுதியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுத்ததுடன் நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகத்தை சீரமைக்க 5 மணித்தியாலங்களுக்கு மேல் ஆனமை குறிப்பிடத்தக்கது.