தலைக்கவசத்தில் மீட்க்கப்பட்ட போதைப்பொருள்!

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள்  தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது நபர் நேற்று (9) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பாலவின்  பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடத்தல் தீவு பகுதியில் தலைகவசத்தின் உட்பகுதியில்  சூட்சுமமான முறையில் 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து மோட்டார் சைக்களில் வருகை தந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர், சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது