நாட்டின் முக்கிய விமான நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்படுள்ள தீர்மானம்!

இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட 3 விமான நிலையங்களின் நிர்வாகத்தை பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலா, காணி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டியே இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
அந்தவகையில், கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் ஆகியன தொடர்பில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்கப்படுவதுடன், அதானி குழுமம் அதற்காக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை சர்வதேச விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள 07 விமான நிலையங்களின் நிர்வாகத்தை தற்போது அதானி குழுமம் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.