மீனவர் விவகாரம் டில்லிக்குப் பறந்த அவசரக் கடிதம்

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்தக்கோரியும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்றையதினம் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்ககோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த அக்கடிதத்தில்,

“இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து, தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளளேன்.

கடந்த வாரம் எழுதியிருந்த கடிதத்தில் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் கோரியிருந்தேன்.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் உட்பட 15 மீனவர்களை கைத செய்துள்ளதுடன், அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதுபோன்று மீனவர்களைக் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே,பெரும் கொந்தளிப்பையும் விரக்தியையும் ஏற்பட்டுள்ளது.

மீனவர்களின் பிரச்சனைக்குத் தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வுக்காண வேண்டியது மிக அவசியம்.

இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி அதன் மூலம் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.