வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவை கடை ஒன்றில் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07.10) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா இலுப்பையடி பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்ற இளம் குடும்பப் பெண்,
வவுனியா, ஹொரவபொத்தனை வீதியில் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள புடவைக்கடை ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணிடம் கிண்டல் செய்து பேச முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து இளம் குடும்பப் பெண் தனது கணவரிடம் சம்பவம் குறித்து தெரிவிக்க, அங்கு வந்த கணவன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு கிண்டல் செய்த புடவைக்கடைக்குள் சென்று அந்த இளைஞனிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட தகராறில் இளம் குடும்பப் பெண்ணின் கணவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
அதன் பின்னர் அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் அருகில் இருந்தவர்கள் துரத்திச் சென்று வவுனியா பொலிஸாருக்கு அழைத்து வந்து ஒப்படைத்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா முருகனூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, கல்வீரங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.