கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65 குடும்பங்கள் வரட்சியினால் பாதிப்பு!

முல்லைத்தீவு – கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65வரையான குடும்பங்கள் தற்போதைய வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் தற்போது 150க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில் குறித்த பிரதேசத்தில் 65 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. குறித்த கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட பொதுக் கிணறுகள், குழாய்க்கிணறுகள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டன.

இதில் கூடுதலான கிணறுகள் நீரின்றி காணப்படுகின்றன. அதேவேளை குழாய்கினறுகளும், பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

இதனால் தாங்கள் குடிநீர் மற்றும் ஏனைய தேவைக்கான தண்ணீரை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த குழாய் கிணறுகளை புனரமைத்து குடிநீர்க் கிணறுகளை துப்பரவு செய்து தருமாறு, தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த போதும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும், குடிநீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.