மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321 கொரோனா தொற்றாளர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 321 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 7 தினங்களில் 2086 கொரோனா தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொற்றாளர்களும் மரணங்களும் அதிகரித்துவருவதன் காரணமாக பொதுமக்கள் சமூகப்பொறுப்புடன் செயற்படுவதன்மூலம் மட்டுமே இந் நிலைமையினை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும்.

சுகாதார நடைமுறைகளை மீறிச்செயற்படுவோர் மீது தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிககைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 321 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 05 பேர் மரணமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 110 பேரும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 43 பேரும் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 பேரும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

மரணமடைந்தவர்களில் இருவர் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவையும் ஏறாவூர், மட்டக்களப்பு, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளையும் சேர்ந்தவர்களாவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 157 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.