மன்னார் பிரதேச சபையில் இடம்பெற்ற கருத்து வேறுபாட்டு மோதல் ஒலிவாங்கியை தூக்கி அடித்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்….!

மன்னார் பிரதேச சபையில் இன்று இடம்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அமர்வின் போது கலவரம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபைத் தவிசாளராக எம்.எச்.எம் முஜாஹீரா அல்லது உப தவிசாளராக இருந்த முஹமட் இஸ்ஸதீனா தெரிவுசெய்யப்படுவது என்ற பாரிய இழுபறி நிலைமை சபை உறுப்பினர்களுக்கு இடையில் காணப்பட்டது.

இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம், கலவரமாக மாறிய நிலையில் பிரதேச சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்க நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது மன்னார் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா , இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர்காமநாதனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார்.
அத்துடன் மேசையில் இருந்த ஒலிவாங்கியை தூக்கி தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர்காமநாதன் மீது தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அதேவேளை ஒலிவாங்கியை பறித்து தாக்க முயற்சி செய்த போது சபையில் இருந்தவர்கள் பிடித்து சமாதானப்படுத்தி உள்ளனர்.அசம்பாவிதம் காரணமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ஆசிரியர் றோமன் டிப்னா மற்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலச்சந்திரன் கதிர்காமநாதன் ஆகியோர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.