அரிசி விலை தொடர்ந்து அதிகரிப்பு……!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளமையினால் மக்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், நடந்த சில நாட்களாக கட்டுப்பாட்டு விலை இல்லாமையினால் வர்த்தகர்கள் அரிசி விலையினை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வாழ்க்கை செலவீன அதிகரிப்பில், அரிசி விலையும் தாக்கம் செலுத்தியுள்ளதால் தாம் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.மேலும் சில பிரதேசங்களில் அரிசி வகைகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் நாடு அரிசி தற்போது 165 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

160 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி தற்போது 180 ரூபாவுக்கும் மேல் அதிகரித்துள்ளது.120 முதல் 125 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கிராம் வெள்ளை பச்சை அரிசி 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கிராம் சிகப்பு பச்சை அரிசி 125 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை தவிர ஒரு கிலோ கிராம் கீரி சம்பா சுமார் 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சந்தைக்கு கிடைக்கும் அரிசி தொகை குறைந்துள்ளதால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் அரிசி விலை கட்டுப்பாட்டில் இருந்து விலகியுள்ளதுடன் அரிசி வர்த்தகர்கள் அரிசிகளுக்கான விலைகளை நிர்ணயித்து வருகின்றனர்.