இலங்கையே கண்டிராத அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறபோகும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் அரசையும் பதவியில் இருந்து அகற்றுவதற்கான வீதிப் போராட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இலங்கை இதுவரை கண்டிராத மிகப் பெரிய எதிர்ப்புப் பேரணி கண்டியில் இருந்து ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தலதா மாளிகையை வழிபட்ட பின்னர் போராட்டத்தை ஆரம்பித்து மே முதலாம் திகதி கொழும்பைச் சென்றடைவோம்.

ஜனாதிபதியையும் அரசையும் அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்கும் முயற்சியை ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பிக்கும். கொழும்பில் எங்களின் போராட்டத்தை ஆரம்பிக்கும் இடத்தைப் பின்னர் அறிவிப்போம்.

நாங்கள் மார்ச் 15 அன்று நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு மாத கால அவகாசத்தை அரசுக்கு வழங்கினோம். அந்த ஒரு மாதம் இப்போது முடிவடைந்துள்ளது.

எனவே, இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டத்துக்கான நேரம் இது. மே முதலாம் திகதி நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதை அனைவரும் பார்க்க முடியும்.

ஒவ்வொரு போராட்டக்காரர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டத்தைத் தொடரும். மக்களுக்காகச் சிறை செல்ல நாங்கள் அஞ்சமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.