செவ்வாய் முதல் தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தம் ? வெளியான அறிவிப்பு!

பேருந்து கட்டணம் திருத்தப்படவில்லை எனில், செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பில் நாளைய தினம் பரிசீலிக்குமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் செவ்வாய்க்கிழமை (28) முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஒவ்வொரு ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும். குறுகிய காலத்திற்குள் இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இப்போது, பேருந்துகளை நட்டத்தில் இயக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, திங்கட்கிழமைக்குள் (27) வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்திற்கு பச்சை கொடி காட்டப்படாவிட்டால், செவ்வாய்கிழமை (28) முதல் பேருந்து சேவையை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என விஜேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.