வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் பாடசாலை இயங்கும் : வெளியான அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சமகால எரிபொருள் பற்றாக்குறை பிரச்சினை காரணமாக கிழக்கு மாகாணத்தில் அடுத்த வாரம் மூன்று தினங்கள் பாடசாலைகளை நடத்துவது என்று முடிவாகியுள்ளது.

திங்கள், வெள்ளி தவிர்ந்த செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய இடை மூன்று நாட்களிலும் பாடசாலைகள் முழு அளவில் இயங்கும். இந்த ஆலோசனையை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்விச் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருடனான ‘சூம்’ தொழில்நுட்பக் கூட்டத்தில் ஆளுநர் இந்தத் தகவலை தெரிவித்தார்.

இந்தத் தகவலை அந்தந்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அவரவர் வலய ‘வட்ஸ்அப்’ குழுவில் அதிபர், ஆசிரியர்களுக்கு அறிவித்துள்ளனர்.

செவ்வாய், புதன், வியாழக்கிழமை நாட்களிலே ஆசிரியர்களை முழுமையாக வரவைத்து, முழு நேரசூசி வழங்கி மாணவர்களை முழுமையாக வரவழைத்து, முழு அளவிலான கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டார். இதேவேளை, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சில பிழையான வழிநடத்தல்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அதனைப பொருட்படுத்தாமல் அதிபர்களும், ஆசிரியர்களும் இந்த விடயத்திலே ஒத்துழைக்க வேண்டும். முடியுமானால் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்ட அரச அதிபர்களுடன் பேசி எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவுவதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

போக்குவரத்துச் சபையின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். போக்குவரத்துப் பிரச்சினை உள்ள பாடசாலைகளுக்குப் பொதுப் போக்குவரத்து நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.