பதுங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியில் வந்த கோட்டாபய வெளிநாட்டுக்கு பயணம்?

அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று காலை திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்த கோட்டாபய குடும்பம் அங்கிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் சென்று, வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மறைந்திருக்கும் இடம் தொடர்பில் நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து இன்று காலை கோட்டாபய மற்றும் அவரது குடும்பத்தினர் இரண்டு ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

கோட்டாபயவின் வருகைக்காக இரத்மலானை விமானப்படை தளத்தில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய கடந்த அரை மணித்தியாலங்களுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் குடும்பத்துடனான ஹெலிகொப்டர்கள் இரத்மலானை விமானப்படை தளத்தில் வந்தடைந்துள்ளது.

தற்போது, ​​கோட்டாபய இரத்மலானை விமானப்படைத் தளத்தில் உள்ளதுடன், அவரைச் சந்திப்பதற்காக முப்படைத் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளது.

அவர் இரத்மலானையிலிருந்து எங்கு செல்வார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.