கிளிநொச்சியில் கப் வாகனத்தால் பலியான குடும்பஸ்தர்!

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாரதிபுரம் மத்திய வீதியில் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த துரைராசா திலக்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸார், கெப் வாகனத்தின் சாரதியை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் காரைநகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூலை வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து தலை தரையில் மோதியுள்ளார்.

காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.