இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பச்சை நிற அப்பிள் – முதல் பழம் ஜனாதிபதிக்கு!

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை ஆப்பிள்களின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த பழம் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எம்.பி.லக்ஸ்மன் குமார் என்ற விவசாயி, கல்கமுவ தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிளை பயிரிட்டுள்ளார்.

மேற்படி விவசாயியிடம் பயிர்ச் செய்கை தொடர்பிலான தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி, ஆப்பிள் செய்கையை நேரில் காண ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டுக்கு ஆப்பிள் விதைகள் கொண்டுவரப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஏக்கரில் அறுவடை கிடைத்ததாக விவசாயி லக்ஸ்மன் குமார தெரிவித்தார்.

இந்தப் பயிரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த தேவையான விதைகளை உற்பத்தி செய்து விநியோகிக்க முடியும் எனவும் இலங்கையில் எங்கும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளக்கூடிய வகையில் இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளால் கையளிக்கப்பட்ட பச்சை ஆப்பிளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதுடன், அதனை சுவைக்கவும் மறக்கவில்லை.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஜனாதிபதியின் பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிகா பிரேமதாஸ் மற்றும் பீ.ஜே.அசங்க லயனல் ஆகியோர் கலந்துகொண்டனர்.