பளை பேருந்து விபத்தில் காயமடைந்த சிறுவனின் கை துண்டிப்பு

கிளிநொச்சி – பளை பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து பளை முள்ளியடிபகுதியில் ஏ9 வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டு புரண்டது.

இதன்போது குறித்த பேருந்தில் பயணித்த ஒருவர் பலியானதுடன் 17 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்தில் முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் இளம் பெண்ணொருவர் உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.