பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாருடனான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

“கரவிட சியா” என்ற புனைப்பெயர் கொண்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஹங்வெல்ல பிரதேசத்தில் கடையொன்றின் உரிமையாளரை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கடை உரிமையாளரின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி சந்தேகநபர் ஹங்வெல்ல நிரிபோல பிரதேசத்தில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, சந்தேகநபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், பதில் துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.