களுத்துறை மாணவி மரணம் தொடர்பில் தீவிரமடையும் விசாரணை!

களுத்துறையில் 16 வயது பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உட்பட நான்கு சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத்திணைக்களம் எதிர்வரும் நாட்களில் களுத்துறை சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை நீதவானின் விசேட அனுமதியுடன் இந்த வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவியை விடுதிக்கு அழைத்து வந்த அவரது தோழி மற்றும் அவரது காதலன், பிரதான சந்தேகநபர், வாகன சாரதி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது.

விசாரணை தீவிரம்
குறித்த நால்வரை தொடர்ந்து தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள விடுதியின் வரவேற்பாளரிடமும் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாகொட பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் (06.05.2023) பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்த நிலையில், பின்னர் மாடியிலிருந்து குதித்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.