தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் -ஜனாதிபதி

வடக்கு-கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் மாத்திரமின்றி மலையகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இந்திய வம்சாவளிகளான மலையக மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திடீரென நுவரெலியா மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள மக்கள் அங்கு சிறுபான்மையினராகியுள்ளனர்.

அந்த தமிழ் மக்கள் வசிக்கும் பிரதேசங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களது சமூக முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர்களால் அரசியலில் ஈடுபட முடிந்துள்ளதுடன் அரசின் அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கின்றனர். வடக்கு மாகாணத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் மக்களும் அரசமைப்பில் உள்ள அதிகார பரவலாக்கத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றனர்.

அரசமைப்பில் உள்ள விடயங்கள் தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த விடயத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடப் போவதில்லை. அதற்கான உத்தரவாதமும் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய சில அதிகாரங்களும் கோரப்படுகின்ற நிலையில் அந்த விடயம் குறித்து கலந்துரையாடப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.