வவுனியா சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்!

வவுனியாவின் சிரேஸ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மு. சிற்றம்பலம் நேற்றைய தினம் (28-06-2023) சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

முன்னாள் வவுனியா மாவட்ட சபை தலைவராகவும் பொது அமைப்புக்களின் தலைவராகவும் பதவி வகித்த மு. சிற்றம்பலம் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தில் நீண்ட காலமாக தலைவராக இருந்து வவுனியா மாவட்டத்திற்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார்.

பண்டாரவன்னியனின் சிலையை வவுனியா நகரில் நிறுவுவதற்கு அன்றைய வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்துடன் இணைந்து செயற்பட்ட இவர் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் வவுனியா மண்ணில் இருந்து சட்டத்துறையில் சிறப்பாக செயற்பட்டவராவார்.

மேலும், பல இளம் சட்டத்தரணிகளுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் வழிகாட்டியாக இருந்த மு. சிற்றம்பலம் அவர்கள் 80ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.

மு. சிற்றம்பலம் அவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மு. சிவசிதம்பரம் மற்றும் வவுனியாவின் பிரபல ஆசிரியர் மு. கத்தப்புவின் சகோதரராவார்.