எந்தவொரு தேர்தலுக்கும் நாம் தயார் -எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

பலவீனமான ஆட்சி நிர்வாகம் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆணைக்கமைய நிர்வாகத்தைக் கொண்டு செல்வதற்கு எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளாதவது,

இன்று நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன. அஸ்வெசும வரிசையிலும் மக்கள் உயிரிழக்கின்றனர். சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாண்மைகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மக்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் ஆட்சியே இல்லை என்ற அளவுக்கு ஊழல், மோசடிகள் தலைதூக்கியுள்ளன. பலவீனமான ஆட்சி நிர்வாகம் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் மக்கள் இருக்கும் அவலநிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் புதிய ஆணைக்கு செல்ல வேண்டும். அப்புதிய மக்கள் ஆணைக்குள் புதிய தேசிய கொள்கையின் மூலம் நாட்டின் இலக்குகளை அடைய முடியும். எந்த தேர்தலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

மக்களின்  கோரிக்கையான தேர்தல் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மக்கள் இறையாண்மை மற்றும் மக்கள் ஆணை எல்லாவற்றையும் விட முக்கியமானது. அரசாங்கத்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் மக்கள் ஆணைக்கு செல்ல வேண்டும். மக்கள் ஆணை எனும் மக்களினது நீதிமன்றத்திற்குச் செல்ல ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்றார்.