யாழ் மக்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்

  வெளிமாவட்ட வியாபாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்த பொலிஸார், அது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறு கோரியுள்ளனர்.

அதன்படி யாழ்ப்பாண பிராந்தியத்தில் கடந்த 07 மாதங்களில் 10 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான காசோலை மோசடி தொடர்பில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிற்திகதி குறித்த காசோலை மோசடி

யாழ்ப்பாணத்தில் உள்ள உற்பத்தியாளர்களை நாடி வரும் வெளிமாவட்ட வியாபரிகள் , உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்து விட்டு, பணத்திற்கு பதிலாக பிற்திகதி குறித்த காசோலைகளை வழங்கி செல்கின்றனர்.

குறிப்பிட்ட திகதியில் காசோலையை உற்பத்தியாளர்கள் வங்கியில் வைப்பிலிடும் போது, அந்த கணக்கில் பணம் இல்லை என காசோலைகள் திரும்புகின்றன.

அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்து உள்ளூர் உற்பத்தியாளர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்கின்றனர்.

10 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட மோசடிகள் தொடர்பில் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்த பொலிஸார், அவ்வாறு கடந்த 7 மாத கால பகுதியில் 21 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதில் 06 மோசடி சம்பவங்கள் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள அதேவேளை 10 இலட்ச ரூபாய்க்கு குறைவான மோசடிகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் பல முறைப்பாடுகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.