போலியான ஆவணம் தயாரித்தவரை சட்டத்தரணி பட்டியலிலிருந்து நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

போலியான ஆவணம்  தயாரித்தார் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஒருவரை தகுதி நீக்கம் செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இன்று வெள்ளிக்கிழமை (11)  இந்த  தீர்ப்பை வழங்கியுள்ளது.

மத்திய மாகாண மேல் நீதிமன்றத்தின் பதிவாளர் உயர்  நீதிமன்றத்தில் சமர்ப்பித்த முறைப்பாட்டின் பிரகாரம், இந்த சட்டத்தரணிக்கு எதிராக  விசாரணை நடத்தப்பட்டது.

இதன்படி, 1999 பெப்ரவரி  5 ஆம் திகதி, இந்த சட்டத்தரணிக்கு எதிராக, போலியான ஆவணம் தயாரித்ததன் மூலம்  நொத்தாரிசு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பான  விசாரணையின் பின்னர், பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சட்டத்தரணியின் பெயரை சட்டத்தரணிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.