அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!

புத்தளம் கொழும்பு முகத் திடலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (18) மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்படுதை அவதானித்த பொதுமக்கள் புத்தளம் தலைமையகப் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரும் மற்றும் தடவியல் பொலிஸாரும் சடலத்தைப் பார்வையிட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஷாம் சடலத்தைப் பார்வையிட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

55 முதல் 60 வயதிற்கும் இடைப்பட்டவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சுமார் 05 அடி 03 அங்குல உயரமும், தடித்த, ஒல்லியான உடலும், தலையின் முன்பகுதி வழுக்கையும், வெளிர் நிற சட்டை மற்றும் கறுப்பு நிற நீண்ட காற்சட்டையும் அணிந்திருந்ததாகவும், பழுப்பு நிற காலணிகள் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையகப் பொலிஸாரும் மற்றும் தடவியல் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.