மீள் எழுச்சி பெறும் மாவீரர் துயிலுமில்லங்கள்!

தமிழ் மக்களின் உரிமைப் போரின்போது தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி ஆகும். தமிழ் மக்களால் மாவீரர் தினம் நினைவுகூரப்படவுள்ளமையை முன்னிட்டு இன்று (04) சிரமதானப் பணிகளும் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றன.

மன்னார், ஆட்காட்டிவெளியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவினரால் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மலர் வணக்கம் செய்யப்பட்டு மாவீரர் தினம் ஆரம்பிப்பு

இந்த சிரமதான பணிகள் மாவீரர் நெடுங்கீரனின் தந்தை வீரசிங்கம் தலைமையில்இடம்பெற்றன.

இன்றைய தினம் சிரமதானப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், முதல் பெண் போராளி இரண்டாம் லெப் மாலதியின் சகோதரனால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மறைந்த மாவீரர் ஒருவரின் தந்தையினால் மலர் வணக்கம் செய்யப்பட்டு மாவீரர் தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதான பணிகளில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், துயிலும் இல்ல பணிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.