பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாவெல்ல பகுதியில் 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தங்காலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்.

தங்காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் குழு குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நேற்று (19) பிற்பகல் சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது, ​​தங்காலை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் என தெரியவந்துள்ளது.

மேலும், பெண் ஒருவரையும் நபரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கி வீடு புகுந்து 4 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை திருடிய குற்றங்களில் இந்த சந்தேகநபர் தேடப்பட்டு வந்துள்ளதாவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் திருடப்பட்ட குளிர்சாதனப் பெட்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.