வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்!

விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் 4 ஆம் வருடத்தில் கல்வி கற்க வேண்டிய 3 ஆம் வருட 2 ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரி வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதோடு விரிவுரையாளர்கள் பணியாளர்கள் உட்செல்லமுடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இசைத் துறை மாணவர்களது போராட்டத்தினால் ஏனைய துறை மாணவர்களின் விரிவுரைகளும் பாதிக்கப்படுவதாக விரிவுரையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமது விரிவுரைகளை துரிதப்படுத்தக்கோரி, ஏனைய மாணவர்களின் விரிவுரைகளை நிறுத்தி போராட்டம் செய்வதை ஏற்கமுடியாது எனவும் ஏனைய துறையினர் தெரிவித்தனர்.