வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிருந்தமலர் என்ற 21 வயதுடைய இளம்பெண் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு அவர் தனது வீட்டின் பின்பக்க கதவு வழியாக வெளியே வந்தபோது துப்பாக்கியால் சுடபட்டார்.
ஓய்வுபெற்ற தபால் ஊழியரான 74 வயதுடைய தந்தையுடன் வீட்டில் தனியாக வசிக்கும் யுவதி, தாயை இழந்துள்ளதாகவும் சகோதரர்கள் வேறு பிரதேசத்தில் வசிப்பதாகவும் நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பதில் பொலிஸ் அதிகாரி விஜேகோன் தெரிவித்தார்.
காதல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.