கிளிநொச்சியில் பந்தல்காரனின் வீட்டை அடித்து நொருக்கிய காவாலிகள்!

கிளிநொச்சி மலையாளபுரத்தில் நேற்று (18) இரவு எட்டு முப்பது மணியளவில்
வீடு ஒன்றினுள் புகுந்த இளைஞர் குழுவொன்று நடத்திய வெறியாட்டத்தில் பல

இலட்சம் பெறுமதியான வீட்டு உடமைகள் நாசம் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது-

நேற்று புதன் கிழமை இரவு எட்டு முப்பது மணியளவில் மலையாளபுரம் கிராம
அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளரின் வீட்டுக்குள் நுழைவாயில் கதவினை
உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற ஐந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வீட்டின்
கதவினையும் உடைத்து உள் நுழைந்து நடத்திய தாக்குதலில் குளிர்சாதனப்
பெட்டி, தொலைக்காட்சி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள், தளபாடங்கள்,
வீட்டின் ஜன்னல்கள் உள்ளிட்ட சொத்துக்களை அடித்து நொருக்கியுள்ளனர்.

அத்தோடு இக் கும்பல் வீட்டிற்குள் நுழைவதனை அவதானித்த வீட்டின்
உரிமையாளரான கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் பின் வழியால்
தப்பிச் சென்று விட்ட நிலையில் அவரது மகன் மீது தந்தையை கேட்டு தாக்குதல்
நடத்தியுள்ளனர். கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான 80 அடி
தகரப் பந்தல் ஒன்று கிராம அபிவிருத்திச்சங்கத்தின் பொருளாளரின்
பொறுப்பில் இருந்துள்ளது. அன்மையில் கிராமத்தில் நடந்த இரண்டு மரண
வீடுகளுக்கும் அவர் அதனை 40 அடியாக பிரித்து இரண்டு வீடுகளுக்கும்
வழங்கியுள்ளார். ஆனால் தங்களுக்கு 80 அடி பந்தலையும் வழங்கவில்லை எனத்
தெரிவித்து ஏற்பட்ட முரண்பாடுகாரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றதாக
பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்
இதே குழு கிராமத்தில் உள்ள பிரிதொரு வீட்டிற்குள் நுழைந்து இவ்வாறு
தாக்குதல் நடத்திய போதும் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து இதுவரை
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்த கிராமத்தவர்கள்
இதன் காரணமாக இவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு அடாவடித்தனங்களில் ஈடுப்பட்டு
வருகின்றனர் என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.