பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரியந்தகுமார வழக்கில் மேலும் 33 பேர் கைது…!

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்தகுமார கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 33 முக்கிய சந்தேகநபர்களை இன்று கைது செய்யததாக சியால்கோட் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரியந்தகுமார, டிசம்பர் 3ஆம் திகதி மத அடிப்படைவாதிகளால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொடூரமான கொலையானது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியதுடன் , உலக அரசியல் வட்டாரங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடமிருந்து பரவலான கண்டனங்கள் எழுந்தன.

சம்பவம் தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்ட 52 சந்தேகநபர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 33 முதன்மை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பிரியந்தகுமார கொலை தொடர்பில் இதுவரை 85 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.