யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம்

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை காட்சிக்காக வைக்கப்படுகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக் களத்தில் இலங்கையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.

எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பதாதைகள் அகற்றப்பட்டிருந்தன.

இறந்த ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இவ்வாறான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அகற்றப்பட்ட பின்னர் இன்று மீண்டும் அந்த பதாதைகளை அங்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாதையும் அங்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் போராட்டக் களத்தில் இசைப்பிரியாவின் புகைப்படத்தைத் தாங்கி இருந்தவர் கருத்து வெளியிடுகையில்,

விடுதலைப் புலிகளின் ஊடகங்களான நிதர்சனம் உட்பட அவர்களின் ஊடகங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர் என்ற வகையில் நாங்கள் இசைப்பிரியாவை அறிவோம். இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளராகவே பணியாற்றினார்.

அவர் துப்பாக்கியை ஏந்தி போரில் ஈடுபட்டவர் அல்ல. எனது சிறந்த நண்பரான இருந்த திரைப்பட இயக்குனர் கேசவராஜன் நவரட்ணமும் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் சம்பந்தப்பட்டு ஊடகவியலாளராக பணியாற்றியவர்.

அவர் திரைப்பட படைப்பாளி, அண்மையில் உயிரிழந்தார். இசைப்பிரியா, கேசவராஜன் நவரட்ணத்தின் மாணவி என்று கூறுகின்றனர்.

இசைப்பிரியா போரில் துப்பாக்கி ஏந்தியவர் இல்லை. அவரும் இறுதிக்கட்ட போரின் போது இடையில் மாறியவர். இசைப் பிரியாவை கொலை செய்தமைக்கான வீடியோக்கள் உள்ளன.

சிலர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசாங்கமும் அது இசைப்பிரியா என்பதை ஏற்கவில்லை. இசைப்பிரியாவும் போரில் காணாமல் போயுள்ளார்.

இசைப் பிரியா ஆயுதம் ஏந்தி போராடவில்லை என்பதுடன் அவர் இந்த நாட்டில் தனது கொள்கைக்கு அமைய ஊடகப் பணியை செய்த ஊடகவியலாளர் என்ற காரணத்தினால் வாழ்வுக்கு விடை கொடுத்தவர் என்றே கருதுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.