நாட்டில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உணவு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக இலங்கையர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு சுமார் 60 வீதத்தால் குறைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுவதாக தேசிய உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் இணைந்து உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான பல்துறை கூட்டு பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உணவுத் தட்டுப்பாடு தொடர்பாக வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரிக்குமாறும், தேவைப்பட்டால் இணையத்தின் ஊடாக தேவையான தகவல்களை சேகரிக்குமாறும் படகொட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கையில் யாரும் பட்டினி கிடக்க வேண்டாம் என ஜனாதிபதி ஆணை வழங்கியுள்ளதாகவும், அதற்கு தீர்வாக போதிய உணவு இல்லாதவர்களுக்கு சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடிக்கு அரச அதிகாரிகளே ஓரளவு பொறுப்பாளிகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.