பிறந்த குழந்தையை 50,000 ரூபாய்கு விற்பனை செய்த தந்தை!

பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை 50,000 ரூபாவுக்கு வாங்கிய பெண் ஒருவரும் இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தகாத உறவில் இருந்து பிறந்த குழந்தை, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவம் முடிந்து வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், குழந்தையின் தந்தைக்கும் தாய்க்கும் இடையில் பிரச்சினை இருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனையடுத்து, அனுராதபுரம் மல்வத்தையைச் சேர்ந்த 21 வயதுடைய குழந்தையின் தாய் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு குழந்தை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இடைத்தரகராக செயற்பட்ட கபிட்டிகொல்லேவ வஹல்கட பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரும், அனுராதபுரத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குழந்தையை தந்தையே விற்றுள்ளதாகவும், தற்போது அந்த பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாயின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குழந்தை மீட்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையின் தாதி மற்றும் உதவியாளர் ஆகியோர் குழந்தையை விற்பனை செய்ய உதவியிருக்கலாம் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.