யாழில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி : மற்றவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

யாழில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொட்டடி – லைடன் சந்தியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொட்டடியைச் சேர்ந்த ரொபிக்ஷன் (வயது-21) என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நகரிலிருந்து கொட்டடி நோக்கி வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.