தமிழர் பகுதியில் 25 வீத இராணுவக் குறைப்பு கோரிக்கை! அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம்!

1983க்கு முந்தைய தமிழர் பகுதிகளில் காலப்பகுதியில் இருந்ததைப் போன்று இராணுவப் பிரசன்னத்தை குறைக்க இலங்கைத் தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் ஏற்படும் நிலையில், இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு அழைப்பிற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் ஒப்புதல் அளித்துள்ளன.

சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தமிழர் பகுதிகளில் இருந்து 25 வீதத்தினால் இலங்கை இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என இலங்கை சிவில் குழுக்களும் கோரியுள்ளன.

இது பேச்சுவார்த்தைக்கு நல்லெண்ணத்தை உருவாக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்த பின்னரும் தமிழர் பிரதேசங்களில் பாரிய இராணுவ பிரசன்னம் தொடர்கிறது.

1983 இல் இருந்து, தமிழர் பகுதிகளில் அதிகப்படியான இராணுவக் கட்டியமைப்பு தொடங்கியது.

தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய அட்டூழியங்களை இழைத்த அதே படையினர் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நிலைகொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் உள்ளக விசாரணை அறிக்கையின்படி, மே 2009 இல் முடிவடைந்த போரின் இறுதி ஆறு மாதங்களில் சுமார் எழுபதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

பல தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள்.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயினர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் பொறுப்புக்கூறலைக் கோருகின்ற போதிலும், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், பாதிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் பலரை உள்ளடக்கிய இலங்கைத் தமிழ் சிவில் சமூகத்தின் கருத்துப்படி, ஒரு அரசியல் அல்லது இராணுவ உறுப்பினர் கூட நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.

இதேவேளை, தமிழர் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென இலங்கைத் தமிழர் சிவில் குழுவும் வலியுறுத்தியுள்ளது

இந்தநிலையில் இலங்கையின் தமிழ் சிவில் குழுவின் இந்த கோரிக்கைகைகளை வட அமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அமைப்பு, ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் செயல் குழு, உலகத் தமிழ் அமைப்பு என்பன அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன