விரைவில் மேலும் சிலருக்கு அமைச்சு பதவிகள்

எதிர்வரும் நாட்களில் மேலும் சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகளின் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் வஜிர அபேவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இவர்கள் பதவியேற்கும் போது, துறைமுகம், பெருந்தெருக்கள், விளையாட்டு, போக்குவரத்து, கைத்தொழில், மின்சக்தி, ஊடகம், முதலீட்டு ஊக்குவிப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதனடிப்படையில், தற்போது இந்த துறைகளுக்கான அமைச்சர்களாக பதவி வகிக்கும் அமைச்சர்களின் துறைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நேற்று பவித்ரா வன்னியாராச்சி வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டதுடன், இ லங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.