நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (20.01.2023) அவர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்காக நான் போட்டியிடவுள்ளேன்.
அதனால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகிறேன் என வருத்தத்துடன் அறிவித்தார்.
அத்துடன், கட்சியின் செயற்குழுவின் ஏகமானதான முடிவின் பிரகாரம் இந்த தீர்மானத்தை தான் எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றுக்கு தெரிவான எனக்கு வாக்களித்த 87,000 பேருக்கும், எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற பணிக்குழாமினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என கூறினார்.
அமைதியான முறையில் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வழிவகுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடமும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.