மோட்டார் சைக்கிளில் சென்ற காதலர்களுக்கு நேர்ந்த சோகம்!

பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த காதலர்களில் காதலி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

காதலன் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாலம்பே கஹந்தோட்ட வீதியில் வசிக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன பிரதிநிதியான கோஷானி அலோக்யா (25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்து

காதலர்கள் இருவரும் பாதுக்க பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு கொடகமவில் இருந்து மாலம்பே நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பனாகொட இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள வீதி திருத்தும் இடத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து முன்னால் வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது இருவரும் அணிந்திருந்த தலைக்கவசம் கழன்று, இளம்பெண்ணின் தலை லொறி மீது மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞனின் வலது கால், வலது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நிச்சயதார்த்தம் செய்ய விருந்த காதலர்கள்

இருப்பினும் விபத்தில் சிக்கிய இந்த காதலர்கள் இருவரும் எதிர்வரும் நாளில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள எதிர்பார்த்திருந்தனர் என்றும், தேவையொன்றுக்காக உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் விபத்திற்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த காதலியின் பிரேத பரிசோதனை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி சிந்தக உதயகுமாரவினால் (07) நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அதுருகிரிய காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் சாரதா பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.