மது அருந்தி விட்டு பாடசாலை சென்ற மாணவி!

கெக்கிறாவயில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் மதுபானத்தை அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பில் எவரேனும் அவரை மதுபானத்துக்கு அடிமையாக்கி விட்டாரா? அல்லது அவருக்கு மதுபானத்தை பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டுள்ளாரா என ஆராய்ந்து அறிக்கையிடுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அவ்வாறு இருப்பின் அது தொடர்பான சந்தேகநபரை கைது செய்யுமாறும் கெக்கிறாவ நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை

அத்துடன் சிறுமி தொடர்பில் விசேட சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.

கெக்கிறாவ கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு சமூகமளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர் பயிலும் பாடசாலைக்கு முன்பாக போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் மதுபானம் அருந்தி விட்டு சிறுமி பாடசாலைக்கு சமுகமளித்துள்ளதை கண்டறிந்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் அச் சிறுமியின் தாத்தாவினால் அவர் மதுபானம் அருந்துவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.