வரி அடையாள இலக்கத்தை பெற புதிய திட்டம்!

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச செயலகங்களில் அதனைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

“உள்நாட்டு வருமான வரித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள இலக்கத்தைக் குறிப்பிடுவதன் மூலம் எந்த நேரத்திலும் TIN இலக்கத்தைப் பெறலாம். அதனை இலகுவாக்க பிரதேச செயலகங்கள் மூலம் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் நடைமுறை

இந்த நடைமுறை திங்கட்கிழமை முதல் விரைவில் செயற்படுத்தப்படும் என்று நம்புகின்றேன். வரி செலுத்துவதில் சுமை இல்லை. மாத வருமானம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும்.

எவ்வாறாயினும், வரி ஏய்ப்பு செய்யும் பாரிய வர்த்தகர்களை பாதுகாப்பதன் மூலம் அரசாங்கம் அநியாயமாக வரிகளை வசூலிப்பதாக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஜனவரி முதல் திகதியிலிருந்து வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வருகை தந்ததைக் காண முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.