நிபந்தனையின் அடிப்படையில் இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்யப்பட்டு பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றையதினம் (31.01.2024) மன்னார் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பணிப்பாளரின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டமை, இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்டமை, மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழில் முன்னெடுத்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டு இவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை

மேலும் படகிற்கு குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன் போது அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய கடற்றொழிலாளர்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஊடக மிரிஹான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 18 பேர் கடந்த (16.01.2024) ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.